குவாண்டம் அறிவியல் புரட்சி: ஐபிஎம் வெளியிட்ட அதிவேக குவாண்டம் பிராசசர் செய்யப் போவது என்ன?

குவாண்டம் அறிவியல் புரட்சி: ஐபிஎம் வெளியிட்ட அதிவேக குவாண்டம் பிராசசர் செய்யப் போவது என்ன?



100 க்யூபிட்களுக்கு மேல் இணைக்கப்பட்ட முதல் குவாண்டம் பிராசசர் என்ற பெருமை ஐபிஎம்மின் ஈகிள் பிராசசருக்கு கிடைத்திருக்கிறது.


அதிவேக கணினிகளை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மேம்பட்ட "குவாண்டம்" பிராசரரை ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.


இந்த பிராசரரை பயன்படுத்தும் இயந்திரங்கள் கணினித் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடும். குவாண்டம் இயற்பியலின் விசித்திரமான நுட்பங்களைப் பயன்படுத்தி, இதுவரை மனிதர்கள் வைத்திருக்கும் மிக மேம்பட்ட கணினிகளால் தீர்வுகாண முடியாத சிக்கல்களை குவாண்டம் கணினிகளால் தீர்த்து வைக்க முடியும்.


ஆனால் அப்படியொரு கணினியை கட்டமைப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் குவாண்டம் கணினிகள் இன்னும் ஆய்வகத்துக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன.


இப்போது ஐபிஎம் வெளியிட்டிருக்கும் பிராசசர் சிப்பில் 127 "க்யூபிட்"கள் உள்ளன. இது இதற்கு முன் ஐபிஎம் வெளியிட்ட பிராசசரைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்.


பிட், பைட் என்பதையெல்லாம் தொழில்நுட்ப உலகில் கேள்விப்பட்டிருப்போம். இப்போது இருக்கும் கணினிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இந்த "பிட்" என்ற நுட்பத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன.


சமஸ்கிருதம் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது எந்த அளவு உண்மை?

நாசா விண்கலத்தில் உடைந்த கதவு: கீழே சிந்தும் சிறுகோள் துகள்கள்

ஆனால் க்யூபிட் அல்லது குவாண்டம் பிட் என்பது குவாண்டம் தொழில்நுட்பத்தின் அடிப்படை. அது ஒரு மாயாஜாலம் காட்டும் நுட்பம் என விஞ்ஞானிகள் பரவலாக வியந்து பேசுவது உண்டு.


தற்போது ஐபிஎம் வெளியிட்டிருக்கும் பிராசசரின் பெயர் ஈகிள். இது குவாண்டம் கணினிகளை செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று ஐபிஎம் கூறுகிறது.


ஆனால் நிபுணர்கள் இன்னும் முழுமையாக நம்பிவிடவில்லை. இது உண்மையிலேயே குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம்தானா என்பதை உறுதி செய்வதற்கு தங்களுக்கு இன்னும் முக்கியமான தரவுகள் தேவைப்படுகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்.


கடந்த சில ஆண்டுகளாக குவாண்டம் கணினித் துறையில் பரவலாக ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதில் இருக்கும் திறனும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளும்தான் இந்த ஆர்வத்துக்குக் காரணம்.


புதுவகையான பொருள்களை உருவாக்குவதிலும், மருந்துகளைத் தயாரிப்பதிலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதிலும் குவாண்டம் கணினிகள் இதுவரை இல்லாத வேகத்தில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.


குவாண்டம் கம்ப்யூட்டர்கள் செயல்படும் விதம் இப்போதிருக்கும் கணிகள் செயல்படும் விதத்தைக் காட்டிலும் அடிப்படையிலேயே மாறுபட்டது.


இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கணினிகளின் தகவல்கள் "பிட்" என்ற அலகைக் கொண்டு சேமிக்கப்படுகின்றன அல்லது செயல்படுத்தப்படுகின்றன. பிட் என்பது 0 அல்லது 1 ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு மதிப்பைக் கொண்டிருக்கலாம்.


ஆனால் குவாண்டம் தொழில்நுட்பம் பிட் என்ற அலகைக் கைவிட்டுவிட்டு, புதிய அலகைப் பயன்படுத்துகிறது. அதுதான் க்யூபிட். இதில் ஒரே நேரத்தில் 0 அல்லது 1 ஆகிய இரு மதிப்புகளும் இருக்கலாம்.


இதை சூப்பர்பொசிசன் என்கிறார்கள். குறிப்பிட்ட ஒன்று ஒரே நேரத்தில் பல்வேறு நிலைகளில் இருக்க முடியும் என்ற கருத்துரு இது. புரிந்து கொள்வதற்கும் விவரிப்பதற்கும் சற்று சிக்கலானது என்பதைப் போலவே இதை கட்டமைப்பதிலும் விஞ்ஞானிகளுக்கு பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.


க்யூபிட்களின் திறனைப் பயன்படுத்த வேண்டுமானால் பல க்யூபிட்களை ஒன்றுடன் ஒன்று இணைக்க வேண்டும். இதை "நெருக்கப் பிணைப்பு" என்கிறார்கள்.


கணினிகள் பயன்படுத்தும் பிராசசரில் ஒவ்வொரு க்யூபிட் சேர்க்கப்படும்போதும், அந்தச் பிராசசரின் கணக்கீட்டுத் திறன் இரண்டு மடங்காகிறது.



Post a Comment

Previous Post Next Post